உத்தரப்பிரதேசத்தில் 17 மாணவிகளிடம் அத்துமீறியதாக பள்ளி முதல்வர் உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் முஸாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு செய்முறைத் தேர்வுகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவிகள் 17 பேரை அங்குள்ள பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கிச்சடியை சாப்பிட்டதும் மாணவிகள் சுயநினைவை இழந்ததாக தெரிகிறது.
அப்போது பள்ளி முதல்வரும், அவரது உதவியாளரும் மாணவிகளிடம் அத்துமீறியதாகவும், பின்னர் மாணவிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் நடந்த இந்த நிகழ்வு குறித்து மாணவிகள் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளனர். மேலும் மாணவிகள் பள்ளிக்கு செல்ல மறுத்துத்ததையடுத்து இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. இதனை அடுத்து தலைமறைவாக உள்ள இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.